| ADDED : செப் 30, 2011 01:49 AM
கடலூர் : கடலூர் நகராட்சியில் சேர்மன் பதவிக்கு பா.ம.க.,வில் வேட்பாளராக
அறிவிக்கப்பட்டவருக்கு ஓட்டு இல்லாததால் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டார். புதிதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர், மனு தாக்கலுக்கான நேரம் முடிந்ததால்
ஏமாற்றத்துடன் திரும்பினார். கடலூர் நகராட்சி சேர்மன் பதவிக்கு பா.ம.க,
சார்பில் போட்டியிட கட்சியின் மாநில துணை செயலர் சண்முகம்
அறிவிக்கப்பட்டிருந்தார். நகராட்சியில் ஓட்டு இல்லாததால் அவரால் போட்டியிட
முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் சண்முகம் நேற்று பகல் 11 மணிக்கு 3வது
வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட மனுதாக்கல் செய்தார்.
இந்நிலையில் பிற்பகல் 2.30 மணிக்கு பா.ம.க., சார்பில் வழக்கறிஞர் தமிழரசன்
வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் மனு தாக்கல் செய்ய
நகராட்சி அலுவலகம் சென்றார். கமிஷனர் இளங்கோவன் அவரிடம் மனு தாக்கலுக்கு
தேவையான ஆவணங்களை கேட்டார். வேட்பு மனு பிற்பகல் மூன்று மணிக்குள் தாக்கல்
செய்ய வேண்டும் என்பதால் 30 நிமிடங்களுக்குள் அவரால் 'அபிடவிட்' (உறுதி
மொழி பத்திரம்) தயார் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.ஒவ்வொரு
தேர்தலின் போதும் தமிழகத்தின் ஆட்சியை தீர்மானிப்பது நாங்கள் தான் என மார்
தட்டிக்கொண்டிருந்த பா.ம.க.,வினால் நகராட்சி சேர்மன் பதவிக்கு சரியான ஒரு
வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் போனது கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.