உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பாதிக்கப்பட்ட 2.28 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு ரூ.287 கோடி இழப்பீடு அமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை

 பாதிக்கப்பட்ட 2.28 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு ரூ.287 கோடி இழப்பீடு அமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை

குள்ளஞ்சாவடி: கடந்தாண்டு மாநிலத்தில் பாதிக்கப்பட்ட, 2.28 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு, ரூ. 287 கோடி இழப்பீடு விரைவில் வழங்கப்படும் என, அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த தியாகவல்லி பகுதியில் ரூ. 81.12 கோடி மதிப்பில் நடந்து வரும் அருவாள் மூக்கு திட்ட பணிகளை வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று ஆய்வு செய்தார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். அப்போது அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது: பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான அருவாள்மூக்கு திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மழைக்காலத்தில் மழைநீருடன் நெய்வேலி சுரங்க நீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் கரையோரம், 24 கிராம விளைநிலங்கள் பாதிப்படைவது தொடர் நிகழ்வாக இருந்தது. அருவாள்மூக்கு பணி முடிந்தால் கீழ்பரவனாற்றின் இருபுறமும் உள்ள, 15,600 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்படும். இதனால், 24 கிராமங்களில் உள்ள மக்கள் குடியிருப்புகள், உடைமைகள், விவசாய பொருட்கள், மனித உயிர்கள் மற்றும், கால்நடைகள் பாதுகாக்கப்படுவதோடு புதிய தடுப்பணை மூலம் கடல் நீர் உள் புகுவது தடுக்கப்படும். விளை நிலங்கள் வெள்ள பாதிப்பு குறித்து டிசம்பருக்குள் கணக்கெடுப்பு முடிந்து உரிய நிவாரணம் வழங்கப்படும். கடந்தாண்டு டெல்டா உள்ளிட்ட மாநிலத்தில் பாதிக்கப்பட்ட, 2.28 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு சுமார், 287 கோடி இழப்பீடு விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி