| ADDED : ஜன 09, 2024 07:01 AM
நடுவீரப்பட்டு : பத்திரக்கோட்டை பகுதியில் விளைந்துள்ள பன்னீர் கரும்புகளை வெளி மாவட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் வாங்கி சென்ற நிலையில் மழையின் காரணமாக கரும்பு விற்பனை மந்தமாக உள்ளது.நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை, சிலம்பிநாதன்பேட்டை, குமளங்குளம், சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளில் பன்னீர் கரும்புகளை விவசாயிகள் ஆண்டுதோறும் ஆண்டும் பயரிட்டு வருகின்றனர்.ஒவ்வொரு வருடமும் கரும்பு பயிரிட உரம்,ஆள்கூலி செலவு அதிகரித்து வருகிறது.ஆனால் விலை மட்டும் ஏறுவதில்லை.இதனால் விவசாயிகள் கரும்பு பயிரிட சற்று சுனக்கம் காட்டி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக அரசு பொங்கல் பரிசுடன் ஒரு கரும்பு வழங்கி வருகிறது.ரேஷன் கடையில் 10 ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிட அரசு உத்தர விட்டுள்ளது.இதனால் வெளி மாவட்ட கூட்டுறவுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் கரும்புகளை வாங்கி லாரிகளில் எடுத்து செல்கின்றனர். கடந்த இரண்டு நாட்களாகவே கடும் மழை பெய்து வருவதால்,அட்வான்ஸ் கொடுத்த அதிகாரிகள் பலர் கரும்புகளை வாங்கி எப்படி எடுத்து செல்வது என குழப்பத்தில் உள்ளனர்.கடந்த சில ஆண்டுகளாகவே 20 கரும்பு உள்ள ஒரு கட்டு ரூ.350 முதல் ரூ.400 வரை மட்டுமே விற்று வருகின்றனர்.கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் அரசு ஒரு கழி கரும்பு ரூ33 ஒதுக்கீடு செய்துள்ளனர்.இதில் ஆள் கூலி,வண்டி வாடகை அடங்கும். ஆனால் தற்போது அதிகாரிகள் ரூ.15 முதல் அதிகப்படியாக ரூ19 வரை மட்டுமே கொள்முதல் செய்து எடுத்து செல்கின்றனர்.ஒரு லாரியில் குறைந்தது பத்தாயிரம் கரும்புகளை ஏற்றி செல்கின்றனர்.சென்னைக்கு செல்ல லாரி வாடகை 20 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக லாரி ஓட்டுனர்கள் தெரிவித்தனர். மீதி பணம் என்ன ஆனது.அரசு ஆயிரம் உத்திரவு பிறப்பித்தாலும்,அதிகாரிகள் வைப்பது தான் சட்டமாவே உள்ளது.கரும்புகளை வாங்கி செல்லும் அதிகாரிகள் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தினால் தான் அரசு நிர்ணயித்த விலைக்கு அதிகாரிகள் வாங்குவார்கள். அரசு கவனிக்குமா?