பெண்ணாடம்; ரூ. 1.22 கோடியில் கிடப்பில் போடப்பட்ட முக்குளம் பூங்கா அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாவட்டத்தில், பெண்ணாடம் தேர்வு நிலை பேரூராட்சியாகவும், வருவாய் குறுவட்டத்தின் தலைமையிடமாகவும் உள்ளது. இங்குள்ள 15 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேலும், விரிவு படுத்தப்பட்ட நகர் பகுதிகளும் அதிகளவில் உள்ளன. இங்கு வசிக்கும் முதியோர்கள், இளைஞர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வயல்வெளிகள், நெடுஞ்சாலை, கிராம சாலை பகுதிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் முறையாக நடைபயிற்சியில் ஈடுபட முடியாததும், சாலை பகுதிகளில் நடந்து செல்லும்போது வாகன விபத்துகளில் சிக்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க பெண்ணாடம் பேரூராட்சி வார்டு மக்கள், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் நடைமேடையுடன் கூடிய பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதையேற்று கடந்தாண்டு, கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 1 கோடியே 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்காக பெ.கொல்லத்தங்குறிச்சி செல்லும் சாலையோரம் உள்ள முக்குளம் தேர்வு செய்யப்பட்டது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முக்குளம் துார்வாரும் பணிகள், தொடர்ந்து கரைகள் பலப்படுத்துதல், சுவர்களில் கான்கிரீட் கல் பதித்தல், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் துவங்கியது. இந்நிலையில், பூங்கா அமைத்தல், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அமைத்தல், அமருவதற்காக கான்கிரீட் இருக்கை மற்றும் குளத்தை சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் எதுவும் இதுவரை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் முதியோர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள சாலையில் செல்வது மட்டும் தொடர்கிறது. சிறுவர்களும் பூங்கா வசதியின்றி விளையாட முடியாமல் தவிப்பில் உள்ளனர். அதனால், கிடப்பில் போடப்பட்ட முக்குளம் பூங்கா அமைக்கும் பணியை விரைந்து துவக்க மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மக்கள் கூறுகையில், ' பணிகள் துவங்கி, ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை பூங்கா பயன்பாட்டிற்கு வரவில்லை. குளத்தில் சீமைகருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து மண்டியுள்ளன. மேலும், அருகில் வசிப்போர் தங்களின் வீட்டு குப்பைகளை முக்குளத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் குளத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், பூங்காவும் பயன்பாட்டிற்கு வருமா என்பது சந்தேகமாகவே உள்ளது. மேலும், அரசு நிதியும் பாழாகிறது' என்றனர்.