வடகரை பள்ளிக்கு விளையாட்டு மைதானம்: மாணவர்கள் எதிர்பார்ப்பு
பெண்ணாடம்: வடகரை அரசுப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெண்ணாடம் அடுத்த வடகரை அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை 195 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் வடகரை, நந்திமங்கலம், கோனுார், அருகேரி, எரப்பாவூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவர்கள் வந்து படித்துச் செல்கின்றனர். பள்ளியில் விளையாட்டு மைதானம் வசதி இல்லை. இதனால், விளையாட்டுத்துறை சார்பில் குறுவட்ட, மாவட்ட, மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் நிலையில், விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. விளையாட்டு மைதானம் அமைக்கக்கோரி, இப்பகுதி கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் அரசு மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, வடகரை அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதானம் வசதி ஏற்படுத்த கல்வித்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.