பெண்ணாடம்: ரூ.7.85 கோடி செலவில் துவங்கப்பட்ட பெலாந்துறை அணைக்கட்டு புனரமைப்பு பணி கிடப்பில் போடப்பட்டதால்,பில்லர்களில் விரிசல் ஏற்பட்டுஅணை வலுவிழக்கும் அபாயம்ஏற்பட வாய்ப்புள்ளது.பெண்ணாடம் அடுத்த பெலாந்துறை - பெரியகொசப்பள்ளம் கிராமங்களுக்கிடையே, வெள்ளாற்றின் குறுக்கே கடந்த 1876ல் 200.80 மீட்டர் நீளத்தில், அப்பகுதி விவசாய பாசனத்திற்காக அணை கட்டப்பட்டது.இதன் மூலம், 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 12 ஆயிரத்து 234 ஏக்கர் பரப்பிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீரை பயன்படுத்தி கரும்பு, நெல், கேழ்வரகு மற்றும் தோட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.மேலும் டி.வி.புத்தூர், ராஜேந்திரப்பட்டிணம், ஆனந்தகுடி, கொக்கரசம்பேட்டை, குணமங்கலம், திருபுத்தூர், மேல்புளியங்குடி, வக்கரமாரி, நகரப்பாடி, சேல்விழி, கலியன்குப்பம், ஸ்ரீ நெடுஞ்சேரி, கானூர், கலிங்கனேரி, பாண்டியன் பெரிய ஏரி, பாண்டியன் சித்தேரி, பூவனேரி, பாளையங்கோட்டை ஏரி என 18 ஏரிகள் பாசன கிளை வாய்க்கால் மூலம் தண்ணீர் பெறுகின்றன.பெலாந்துறை அணைக்கட்டு பராமரிப்பின்றி உள்ளதால் பில்லர்கள், கரைகள், பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்ததால் அணையில் போதிய அளவு தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டது. அணையில் அவ்வப்போது சிறுசிறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், தண்ணீர் தேக்க முடியாத நிலை தொடர்ந்தது. அணைக்கட்டை புனரமைக்க வேண்டும் என சுற்றியுள்ள கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.அதனையேற்று, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் நீர்வளம் மற்றும் நிலவள திட்டத்தில் 7 கோடியே 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அணையில் பில்லர்கள், இருபுறம் உள்ள கரைகள், அணைக்கு தண்ணீர் வரத்து பகுதியில் உள்ள சிறுபாலங்கள், கீழ் மற்றும் மேல் பகுதி பக்கவாட்டு சுவர்கள் புனரமைக்க பணிகள் துவங்கியது.அதில், பில்லர்களில் சிமென்ட் பூச்சு வேலை மட்டுமே நடந்துள்ளது. வர்ணம் பூசவில்லை. அதுபோல், இருபுறமும் உள்ள கரைகளில் கல் பதிக்கும் பணிகள், பார்வையாளர்கள் பார்வையிடும் பகுதியில் தடுப்புகள் அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், மழைக்காலங்களில் பில்லர்களில் ஈரப்பதம் அதிகமாகி சிமென்ட் காரைகள் பெயர்ந்து வலுவிழக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.மேலும, அணைக்கட்டின் பார்வையாளர்கள் பகுதியில் தடுப்புகள் அமைக்காததால் அவர்கள் தண்ணீரில் தவறி விழுவதுடன், மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளும் தவறி தண்ணீரில் விழும் நிலை உள்ளது.எனவே, பெலாந்துறை அணைக்கட்டை கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கிடப்பில் போடப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, பெலாந்துறை கிராம விவசாயிகள் கூறுகையில், 'அணைக்கட்டு புனரமைப்பு பணிகள் கடந்தாண்டு துவங்கியது. பல பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் அணையின் பில்லர்கள் மற்றும் கரைகள் வலுவிழந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும்' என்றனர்.
கலெக்டர் அட்வைஸ் காற்றில்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகளை ஆய்வு செய்ய வந்த கலெக்டர் அருண் தம்புராஜ் நீர்வரத்து, இருப்பு விபரம், அணை பாதுகாப்பு குறித்து கேட்டறிந்து, அணையை ஆய்வு செய்தார். பார்வையாளர்கள் பகுதியில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூறினார். ஆனால் 5 மாதங்களுக்கு மேலாகியும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
'குடிமகன்களின் கூடாரம்'
பெலாந்துறை அணைக்கட்டுக்கு மாலை மற்றும் இரவு நேரங்களில் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த குடிமகன்கள் வந்து செல்வதுடன் மது அருந்தி விட்டு போதை தலைக்கேறியதும், பாட்டில்களை தண்ணீர் பகுதி மற்றும் திறந்தவெளியில் வீசி செல்வதுடன் அவற்றை உடைத்துச்செல்கின்றனர்.