| ADDED : பிப் 22, 2024 11:33 PM
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று நடந்த மஹாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சிதம்பரம் நடராஜர் கோவில் சித்சபையில் உள்ள மூலவர் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஆண்டுக்கு 6 முறை மஹாபிஷேகம் நடைபெறும். ஆனித் திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசனம் ஆயிரங்கால் மண்டபத்திலும், 4 முறை நடராஜர் வீற்றிருக்கும் சித்சபை எதிரே கனகசபையிலும் நடக்கிறது.அந்த வகையில் மாசி மாத மஹாபிஷேகம் நேற்று நடந்தது. அதனையொட்டி நேற்று மாலை நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் கனகசபையில் எழுந்தருள செய்யப்பட்டு, இரவு 7:30 மணிக்கு மஹாபிஷேகம் துவங்கி நள்ளிரவு வரையில் நடந்தது.இதில், சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு விபூதி, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கிலான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.முன்னதாக நேற்று காலை கிழக்கு கோபுரம் வாயில் அருகே லட்சார்ச்சனை, யாகசாலையில் கடஸ்தாபனம், அதிருத்ர மகா யாகம் நடந்து மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அதிருத்ர மஹா யாகம், லட்ச ஹோமம், அதிருத்ர ஹோமம், வஸோர்த்தாரா ஹோமம், மகாபூர்ணாஹூதி நடந்தது. ஒரே நேரத்தில் 108 தீட்சிதர்கள், ஒன்பது யாக குண்டங்களில் லட்ச ேஹாமம் செய்தனர்.ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் சிவராம தீட்சிதர், துணை செயலாளர் சிவசங்கர தீட்சிதர் செய்திருந்தனர்.