வேப்பூர் : வேப்பூர் அருகே வேன்- லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில், திருச்சி மாநாட்டிற்கு சென்று திரும்பிய வி.சி., கட்சியினர் 3 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்தனர்.கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம், வில்லியநல்லுார் கிராமத்தை சேர்ந்த வி.சி., கட்சியினர் 30 பேர், அப்பகுதி செயலாளர் வேல்முருகன் தலைமையில், திருச்சியில் நேற்று முன்தினம் நடந்த மாநாட்டிற்கு வேனில் (மேக்சி கேப்) சென்றனர்.மாநாடு முடிந்து, அன்று நள்ளிரவு திரும்பினர். வேனை வில்லியநல்லுாரைச் சேர்ந்த சிரஞ்சீவி, 26; ஓட்டினார். நேற்று அதிகாலை 2:45 மணியளவில், கடலுார் மாவட்டம், வேப்பூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் என்.நரையூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, எதிரே நெல் மூட்டை ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் வேன் மோதி விபத்துக்குள்ளானது.இதில், வில்லியநல்லுார் நாகேஸ்வரன் மகன் உத்திரகுமார், 29; விஜயகுமார் மகன் யுவராஜ்,17; அன்பழகன் மகன் அன்புச்செல்வன், 28; ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; 27 பேர் படுகாயமடைந்தனர்.தகவலறிந்த வேப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு விருத்தாசலம் மற்றும் வேப்பூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த லாரி டிரைவர் செந்தில்கவாஸ்கர், 37; புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையிலும், வேன் டிரைவர் சிரஞ்சீவி, 26; உட்பட 7 பேர் பெரம்பலுார் அரசு மருத்துவமனையிலும், வினோத், 35; நவநீதகிருஷ்ணன்,19; ஹரிஹரன்,18;, சுஜித், 38; உட்பட 7 பேர் சிதம்பரம் அரசு மருத்துவமனையிலும் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.திட்டக்குடி டி.எஸ்.பி., மோகன் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.