| ADDED : ஜூலை 23, 2024 09:11 PM
தர்மபுரி:தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்டத்தில், காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம் மற்றும் காவிரி வடக்கு வன உயிரின சரணாலயம் உள்ளன. இவற்றில் சிறுத்தை, யானை, காட்டுமாடு, கடமான், கரடி, நீர் நாய் மற்றும் பல வகை உயிரினங்கள் உள்ளன. சரணாலயங்களில் கால்நடை மேய்ச்சலுக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.வன விலங்குகளிடமிருந்து கால்நடைகளுக்கும், கால்நடைகளிடமிருந்து வனவிலங்குகளுக்கும் பரவும் நோயை கட்டுப்படுத்தவும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய் பரவாமல் தடுப்பதும் அவசியமாகிறது. சிலர் தொடர்ந்து தங்கள் கால்நடைகளை சரணாலய பகுதிகளில் மேய்ச்சலுக்கு விடுவது தொடர்கிறது. இது, இந்திய வன விலங்கு பாதுகாப்பு சட்டத்திற்கு புறம்பாக உள்ளது. பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை சரணாலய பகுதிகளில் மேய்ப்பதையும், தன்னிச்சையாக அவிழ்த்து விடுவது போன்ற செயல்களிலும் ஈடுபட வேண்டாம்.கால்நடைகள் ஏதேனும் சரணாலய பகுதிகளில் இருந்தால், உடனடியாக அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் பிடித்துச் செல்ல ஏதுவாக வரும், 31 வரை அனுமதி அளிக்கப்படுகிறது. ஆக., 1 முதல் கால்நடைகள் சரணாலய பகுதிகளில் கண்டறியப்பட்டால், அவை பிடிக்கப்பட்டு பொது ஏலத்தில் விடப்படும். கால்நடை உரிமையாளர்கள் வனப்பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றால், வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.