உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் இல்லை: கலெக்டர் தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் இல்லை: கலெக்டர் தகவல்

தர்மபுரி: 'தர்மபுரி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் இல்லை. இருந்த போதும் நோய் தடுப்புக்கு கால்நடை பாராமரிப்பு துறை மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என கலெக்டர் லில்லி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: மேற்கு வங்கம், அஸாம் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் அறிகுறிகள் தென்பட்டதாக ஆய்வுக்கூட அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மண்டல எல்லையான ஓசூர் அடுத்த ஜுஜுவாடியில் வெக்கை நோய் சோதனை சாவடியில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் கால்நடை தீவனம் மற்றும் தீவனப்பொருட்கள் அடங்கிய வாகனங்களை குழுக்கள் அமைத்து 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் கோழிப்ண்ணைகளை மாவட்டத்தில் இயங்கும் 43 கால்நடை மருந்தகங்களில் பணிபுரியும் கால்நடை உதவி மருத்துவர்கள் நேரில் சென்று நோய் அறிகுறிகள் குறித்து கண்காணித்து வருகின்றனர். இப்பணியை மண்டல இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மூலம் கோழிப்பண்ணைகளில் இருந்து மாதம் தோறும் 25 ரத்த மாதிரி பொருட்கள் சேகரிக்கப்பட்டு, சோதனைக்காக சென்னையில் உள்ள மத்திய ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 13 அதி விரைவு குழுக்கள் நியமிக்கப்பட்டு அக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் மாவட்டத்தில் உள்ள கறிக்கோழி, இறைச்சி கடைகள், கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது, மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் இல்லை. பொது மக்கள் இந் நோய் குறித்து அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்