நத்தம், : நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பூக்குழி திருவிழாவையொட்டி 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதத்தை தொடங்கினர்.கோயில் விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியதை தொடர்ந்து நேற்று அதிகாலை பக்தர்கள் உலுப்பகுடி அருகிலுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து புனித தீர்த்தக்குடங்களுடன் சந்தன கருப்பு கோயில் வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்ய, மேளதாளம் முழங்க, வர்ணக் குடைகள், தீ வட்டி பரிவாரங்களுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.இதன் பின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடங்களை தலையில் சுமந்தபடி பக்தி கோஷம் முழங்க மாரியம்மன் கோயிலை சென்றடைந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதம் தொடங்கினர். தொடர்ந்து நேற்று இரவு 9:00 மணிக்கு அம்மன் குளத்திலிருந்து கம்பம் நகர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயிலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.இதை தொடர்ந்து பிப். 16, 20, 23 ல் அம்மன் சர்வ அலங்காரத்தில் மயில், சிம்மம், அன்ன வாகனத்தில் எழுந்தருளி மின்ரதத்தில் ஊர்வலமாக வந்தார். விழா நாட்களில் பக்தர்கள் அக்னிசட்டி ,மாவிளக்கு, கரும்புதொட்டில், அங்கபிரதட்சணம், அலகுகுத்துதல், அரண்மனைப் பொங்கல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள். பிப். 27ல் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கழுமரம் ஏறுதல், பூக்குழி இறங்குதல் நடைபெறும்.மறுநாள் காலை அம்பாள் மஞ்சள் நீராடுதலை தொடர்ந்து அன்றிரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் குளத்திலிருந்து புறப்பட்டு நகர்வலம் வருகிறார். ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சூரியன், திருக்கோவில் பூசாரிகள் கணேஷ், கோபாலகிருஷ்ணன், சின்னராஜ், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ்,யுவராஜ், தினேஷ்குமார் செய்து வருகின்றனர்.