| ADDED : நவ 15, 2025 04:53 AM
மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகள் என 1440 உள்ளன. இதில் அரசு பள்ளிகளில் மட்டும் மொத்தம் 3லட்சத்து 12 ஆயிரத்து 881 மாணவர்கள் படிக்கின்றனர். 9 அரசு மற்றும் பல தனியார் கல்லுாரிகளும் இயங்குகின்றன. இதில் 12ம் வகுப்பு முடித்து கடந்த ஆண்டு 20,802 மாணவர்கள் மேற்கல்வி படிக்கின்றனர். ஏராளமான மாணவர்கள் கிராமங்களில் இருந்து நகர்களுக்கு சென்று பயின்று வருகின்றனர். ஒரு சில தனியார் பள்ளி, கல்லுரிகள் மட்டும் தங்களது சொந்த வாகனங்களில் மாணவர்களை ஏற்றி வருகின்றன. மற்றபடி பெரும்பாலான மாணவர்கள் அரசு, தனியார் பஸ்களையே நம்பி உள்ளனர். கூடுதல் பஸ்களை இயக்காதது, பல கிராமங்களில் அரசு பஸ் வசதி இல்லாதது, திடீரென பஸ்கள் நிறுத்தப்படுவது உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிகொண்டு ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். காலை, மாலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர் என கூடுதலானோர் பஸ்களில் பயணிக்கின்றனர். இதனால் தினமும் அடித்துப் பிடித்து பஸ்சில் இடம் பிடித்து பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி கூடுதல் பஸ்களை இயக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.