திண்டுக்கல்லில் மரம் விழுந்து மாணவி உட்பட 7 பேர் காயம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அரசு நர்சிங் கல்லுாரியின் தங்கும் விடுதியில் மாணவிகளை பார்க்க வந்த உறவினர்கள் மீது அங்கிருந்த மரம் சரிந்து விழுந்ததில் பயிற்சி மாணவி உட்பட 7 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.திண்டுக்கல் பழைய நீதிமன்ற கட்டடத்தில் அரசு நர்சிங் கல்லுாரி மாணவிகளின் தங்கும் விடுதிகள் உள்ளன. 200க்கும் மேலான மாணவிகள் இங்கு தங்கி படிக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் மாணவிகளை சந்திக்க அனுமதிக்கப்படுகிறது. இன்று மதியம் மாணவிகளை பார்ப்பதற்காக பெற்றோர்கள், குடும்பத்தினர் ஏராளமானோர் வந்திருந்தனர். மதியம் 12: 30 மணிக்கு அவர்கள் அந்த வளாகத்திலிருந்த மரத்தடியில் அமர்ந்திருந்தனர். அப்போது திடிரென அங்கிருந்த கொன்றை மரம் அங்கிருந்தவர்கள் மீது விழுந்தது. அதில், மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த அழகர்சாமி, 65, முத்தழகு பட்டியைச் சேர்ந்த முருகபாண்டி,55, பிரமிளா,10, பிரான்சிஸ் சேவியர்,40, ஹெலன்,35, கொட்டப்பட்டி பயிற்சி மாணவி கீர்த்தனா,20, பொன்மாந்துறை வேளாங்கண்ணி,30, ஆகியோர் காயமடைந்தனர். அழகர்சாமிக்கு கால் முறிந்தது. தகவலறிந்த அமைச்சர் பெரியசாமி, அங்கிருந்த வழக்கறிஞர்கள், தீயணைப்புதுறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முறிந்த மரத்தையும் தீயணைப்பத்துறை அலுவலர்கள் வெட்டி அகற்றினர்.