| ADDED : மார் 03, 2024 01:55 AM
காங்கேயம்;திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்தவர் ஹரிகரன், 60. இவர் காங்கேயத்திற்கு பணிக்கு வருவதற்கு முன்பு, குண்டடம் யூனியனில் பி.டி.ஓ.,வாக கடந்த 2022-23ம் ஆண்டு பணி புரிந்துள்ளார். அப்போது, யூனியனில் அம்மா சிமென்ட் வினியோகத் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக தணிக்கை பிரிவு உதவி இயக்குனர் மேற்கொண்ட ஆய்வில், இது உறுதி செய்யப்பட்டது.அதில் அம்மா சிமென்ட் கிட்டங்கியில், ஆவணங்களின் படி இருக்க வேண்டிய சிமென்ட் மூட்டைகளை விட, குறைவான எண்ணிக்கையில் இருப்பதாகவும், பயனாளிகள் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து சிமென்ட் மூட்டைகளுக்கான தொகையை தனியார் ஒப்பந்ததாரர் நிறுவனம் செலுத்தியதும் ஆய்வில் கண்டுபிடிக்கபட்டது. 4,217 சிமென்ட் மூட்டைகள் வினியோகத்தில் முறைகேடு நடந்துள்ளது. இதில் தொடர்புடையதாக வட்டார வளர்ச்சி அதிகாரி ஹரிகரன் உள்ளிட்ட இரு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் மீது தற்போது மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு நடந்து வருகிறது. இதற்கிடையில் பி.டி.ஓ., ஹரிகரன் ஓய்வு பெற இருந்த நிலையில், அவரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.