| ADDED : ஆக 03, 2024 06:52 AM
ஈரோடு: மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட உபரி நீரால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, பவானி, கருங்கல்பாளையம், கொடுமுடி உட்பட பல இடங்களில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.குறைந்த அளவாக, 1 முதல், 2 அடிக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், பெரும்பாலான இடங்களில் வீடுகளிலேயே மக்கள் வசிக்கின்றனர். மிகவும் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் மட்டும், இரவில் முகாமில் தங்குகின்றனர். இதன்படி நேற்று முன்தினம் இரவில், 120 பேர் வரை தங்கி இருந்தனர். பவானி நகராட்சி நடுநிலைப்பள்ளி முகாமில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று ஆய்வு செய்து, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.