உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மரம் வளர்ப்பு அவசியம் பள்ளி முதல்வர் அழைப்பு

மரம் வளர்ப்பு அவசியம் பள்ளி முதல்வர் அழைப்பு

கோபிசெட்டிபாளையம்: ''உலக வெப்பமயமாதலை தடுக்க மரம் வளர்ப்பு திட்டத்தை சமுதாய கடமையாக கொள்ள வேண்டும்,'' என, கோபி ஸ்ரீ குருகுலம் மேல்நிலைப்பள்ளி முதல்வர் டாக்டர் ரங்கராஜ் கூறியுள்ளார். சுதந்திர தினத்தையொட்டி அவர் கூறியதாவது: ஆலைகள், வாகனங்களின் புகையால், வளிமண்டலம் நாளுக்கு நாள் மாசுபடுகிறது. ஓசோன் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகள் வெப்ப மயமாகி வருவதால், பனிமலைகள் உருகி, கடல் மட்டம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை வளம் குன்றி வருகிறது. இது மனித குலத்துக்கு ஏற்பட்டுள்ள சவால். இந்நிலையைப் போக்க, ஏராளமான மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய சமுதாய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. கோபி ஸ்ரீ குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் இயங்கி வரும் பசுமை படை, என்.எஸ்.எஸ்., மூலம் மரக்கன்றுகளை வளர்க்கும் திட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சென்றாண்டு 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பள்ளி வளாகம், நெடுஞ்சாலை மற்றும் மாணவர்களின் இல்லங்களில் நடப்பட்டு, முறையாக பராமரிக்கப்படுகிறது. நடப்பாண்டு 1,000 மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் இரு மரக்கன்றுகளை வளர்த்தால், அழிக்கப்பட்ட 30 சதவீத மரங்களை ஈடுசெய்யலாம். நாடு சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தருணத்தில் நாடு விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து, அவர்களின் நினைவிடங்களில் வீர வணக்கத்தை செலுத்துவோம். மாணவர்கள் உயர்ந்த லட்சியத்தை நோக்கி பயணிக்க வேண்டும். திட்டமிட்டு உழைத்தால் வெற்றி எனும் சிகரத்தை எளிதில் அடைய முடியும். ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே மனிதனை பண்பட்டவர்களாக உயர்த்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ