உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்துணவு மையத்தில் இலவச டியூஷனுக்கு இடையூறு

சத்துணவு மையத்தில் இலவச டியூஷனுக்கு இடையூறு

ஈரோடு: ஈரோடு நேதாஜி ரோடு சத்துணவு மையத்தில் இலவசமாக வகுப்புகள் நடத்த, மைய பொறுப்பாளர் எதிர்ப்பு தெரிவிப்பதால், அங்கு படித்த குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏற்றி படிக்கின்றனர். ஈரோடு நேதாஜி ரோடு 34வது வார்டு ஆலமரத்தெருவில் சத்துணவு மையம் எண் 50 செயல்படுகிறது. இம்மையத்தில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் சத்துணவு சாப்பிடுகின்றனர். அப்பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளதால், மையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் செந்தில், தினேஷ்குமார், விஜயகுமார் ஆகியோர் இலவசமாக டியூஷன் எடுக்கின்றனர்.

ஈரோடு கலெக்டராக இருந்த கார்த்திகேயன் உத்தரவின் பேரில், இலவசமாக மின் இணைப்பும், மின் விசிறியும் வழங்கப்பட்டது. மாலை 6 முதல் 9 மணி வரை இலவச வகுப்புகள் நடந்தது. ஆறு முதல் ப்ளஸ் 2 வரையான 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவ்வளாகம் பெரிதாக உள்ளதால் தனி நபர்களின் குடும்ப விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. சில மாதங்களாக அங்கு சிலர் குடித்துவிட்டு, பாட்டில் மற்றும் சாப்பாடு எச்சிலை அப்படியே விட்டுச் செல்வது குறித்து, அறிவியல் இயக்கத்தினர் புகார் தெரிவித்தனர். அன்று முதல் மாலை நேர வகுப்பு நடத்த, மைய பொறுப்பாளர் அனுமதி மறுத்தார். 15 நாட்களுக்கு மேலாக அங்கு வகுப்பு நடக்கவில்லை. மைய வாயிலில் குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏற்றி படிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை