மனைவி இறந்த வேதனையில் சுடுகாட்டில் கணவன் தற்கொலை
கொடுமுடி, கொடுமுடி, சாலை புதுார், கொல்லம்புதுபாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் விஜயகுமார், 67; இவர் மனைவி சரோஜா, 60; காச நோயால் பாதிக்கப்பட்டவர். கடந்த, 24ம் தேதி காலை வீட்டில் இறந்தார். மகன்கள் சுரேஷ், சண்முகசுந்தரம் ஆகியோர், தாயார் உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்த நிலையில் தந்தை விஜயகுமார் மாயமானார். அவரை தேடி சென்றபோது கொல்லம்புது பாளையம் சுடுகாட்டில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். அவரது உடல் அருகே மொபட் நிறுத்தப்பட்டிருந்தது. மொபட்டில் ஒரு காகிதம் இருந்தது. அதை எடுத்து பார்த்தபோது, 'மனைவி இறந்த வேதனை தாங்காமல் இந்த முடிவை எடுக்கிறேன். இதற்கு யாரும் பொறுப்பில்லை' என குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது கையெழுத்தும் இருந்தது. சுரேஷ் அளித்த புகாரின்படி கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர். மனைவி இறந்த சோகத்தில் கணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது, மகன்கள் மற்றும் உறவினர்களை மட்டுமின்றி, அப்பகுதி மக்கள் மத்தியிலும் வேதனையை ஏற்படுத்தியது.