| ADDED : நவ 27, 2025 02:16 AM
காங்கேயம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த சிவன்மலை கோவிலின் அடிவாரத்தில் கிரிவலப்பாதை அமைந்துள்ளது. அப்பகுதி மக்கள் தினமும், காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். அவ்வாறு காடையூர் கிராமம் பசுவமூப்பன்வலசை சேர்ந்த வியாபாரி கணேஸ்வரன், 60, சிவன்மலை எருக்கலங்காட்டுபுதுாரை சேர்ந்த சுப்பிரமணி, 56, மற்றும் பாலசுப்பிரமணி, 57, ஆகியோர் நேற்று காலை 5:30 மணியளவில் கிரிவலப்பாதையில், மேல்விநாயகர் கோவில் அருகில் வாக்கிங் சென்று கொண்டிருந்தனர்.அப்போது மூவர் மீதும் அடையாளம் தெரியாத கார் மோதியது. இதில் சுப்பிரமணிக்கு காலில் முறிவு ஏற்பட்டது. கணேஸ்வரன் என்பவர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அங்கு வாக்கிங் சென்றவர், இருவரையும் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கணேஸ்வரன் இறந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தார். சுப்பிரமணியை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து குறித்து, சிசிடிவி காட்சிகளை சிலர் வாட்ஸ்ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து விபத்து போல் தெரியவில்லை, கொலை போல் உள்ளது என கேள்வி எழுப்பினர். விபத்தை ஏற்படுத்தி விட்டு, நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத காரை காங்கேயம் போலீசார் தேடி வருகின்றனர்.