| ADDED : டிச 28, 2025 09:14 AM
ஈரோடு: ஈரோட்டில் 'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சி, திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்குரிய திட்டங்கள் மற்றும் பயன்பெற்ற விபரங்கள் குறித்து, கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது.இதில் கலெக்டர் பேசியதாவது: திருநங்கைகள், திருநம்பிகள் சமூகத்தால் ஒதுக்கப்பட்டும், குடும்பத்தால் துரத்தப்படுகின்றனர். இதனால் தவறான பழக்கங்கள், வழிகளில் செல்ல நேரிட்டு, இழப்பு, பாரபட்சங்களுக்கு தள்ளப்படுகின்றனர். அவர்கள் அதிகமாக படிப்பறிவு பெற வேண்டும். அவ்வாறு இல்லாததால் வாய்ப்பு, பாதுகாப்பு கிடைக்காமல் பாகுபாட்டை சந்திக்க நேரிடுகிறது. அவர்களது குறைகளுக்கு தீர்வாக அரசின் நலத்திட்டங்கள், நலவாரிய உதவி வழங்கப்படுகிறது. எனவே கவுரவமான, மரியாதைக்குரிய தொழில் மூலம் வாழ்வாதாரத்தை ஈட்ட வேண்டும். அதற்காகவே அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வீட்டுமனை பட்டா, தொகுப்பு வீடு, குடிசை மாற்று வாரிய வீடு வழங்கப்படுகிறது. தவிர இலவச தையல் இயந்திரம், உயர் கல்வி படிக்க உதவி, குறுகிய கால தங்கும் இல்லங்கள், மகளிர் குழு, சாதாரண கட்டண நகர பஸ்களில் இலவச பயண வசதி, தொழில் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. அவற்றின் மூலம் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். இவ்வாறு பேசினார். கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு உட்பட பலர் பங்கேற்றனர்.