| ADDED : ஜூன் 22, 2024 04:26 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க., மாநில தலைவர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்த மற்றும் பாதித்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தால் பலர் இறந்துள்ளனர். மருத்துவமனையில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தமிழகத்திற்கு மிகப்பெரிய அவமானம்.கடந்தாண்டு விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30 பேர் விஷசாராயம் குடித்து இறந்தனர். அப்போது முதல்வர் ஸ்டாலின் கள்ளச்சாராயம் கலாராத்தை இரும்புகரம் கொண்டு ஒடுக்குவோம் என்றார். ஆனால் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது. இந்த மாவட்டத்தில் கடந்த 40 ஆண்டு காலமாக கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வருகிறது. இது அனைவருக்கும் தெரியும். ஆனால் அரசியல் காரணத்திற்காக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குகின்றனர்.கள்ளச்சாராயம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதற்கு உடந்தையாக இருந்த போலீசார், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எந்த தண்டனையும் இல்லை. இச்சம்பவத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று, துறை அமைச்சர் முத்துசாமி, மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் வேலு ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்ச மற்றும் விற்க உறுதுணையாக இருக்கும் தி.மு.க., மாவட்ட செயலாளர்களான வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., உதயசூரியன் எம்.எல்.ஏ., ஆகியோரை கைது செய்ய வேண்டும். கலெக்டர், எஸ்.பி., மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். உண்மையை தெரிவிக்காமல் கலெக்டர் பொய் கூறியதால் இறப்பு அதிகரித்துள்ளது.சி.பி.சி.ஐ.டி., விசாரணை வெறும் கண்துடைப்பு. இச்சம்பவத்தில் அரசியல் தலையீடு உள்ளதால் சி.பி.ஐ.,விசாரணை வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறினார்.