கள்ளக்குறிச்சி: சென்னை - சேலம், கோயம்புத்துார் மார்க்கமாக செல்லும் அரசு 'ஏசி' மற்றும் எஸ்.இ.டி.சி., பஸ்களில்', கள்ளக்குறிச்சியில் இறங்கும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் சென்னை, சேலம், கோயம்புத்துார், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் தங்கி பணிபுரிகின்றனர். வெளி மாவட்ட கல்லுாரி விடுதிகளில் தங்கி மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இவர்கள் விடுமுறை நாட்களில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் சொந்த ஊருக்கு வருகின்றனர். சாதாரண பஸ்கள் வழித்தடத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று, அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் பயணிகளை ஏற்றி, இறக்குவதால், நீண்ட துாரம் பயணிப்பவர்கள் சிரமமடைகின்றனர். இதனால், நீண்ட துாரம் பயணிப்பவர்கள், அவசர பணிக்காக செல்பவர்கள், முதுகுவலி உள்ளவர்கள், முதியவர்கள் அரசு 'ஏசி.,' மற்றும் 'ஸ்லீப்பர் கோச்' எஸ்.இ.டி.சி., பஸ்களை நாடுகின்றனர். இந்நிலையில், அந்த பஸ்களின் கண்டக்டர்கள் கள்ளக்குறிச்சி நகருக்குள் செல்லாது, புறவழிச்சாலை அல்லது டோல்கேட்டில் இறங்கிக் கொள்ளும்படி கூறுகின்றனர். இருப்பினும் சென்னை மார்க்கத்திலிருந்து வருபவர்களுக்கு ஆத்துார் வரையிலான கட்டணமும், சேலம் மார்க்கத்திலிருந்து வருபவர்களுக்கு உளுந்துார்பேட்டை வரையிலான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. தற்போது கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டமாக செயல்படும் நிலையில் சொகுசு பஸ்களில் கள்ளக்குறிச்சி வரையிலான கட்டணம் வசூலிப்பதிற்கு பதில், கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவசரத்திற்காக பயணம் மேற்கொள்பவர்கள் வேறுவழியின்றி மிதவை பஸ்களில் ஏறி, கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை அல்லது மாடூர் டோல்கேட்டில் இறங்கி, அங்கிருந்து வேறு வாகனத்தில் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் செல்கின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் வருபவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, சென்னை - சேலம், கோயம்புத்துார் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு 'ஏசி', மற்றும் எஸ்.இ.டி.சி., ஸ்லீப்பர் கோச் பஸ்களை இரவு நேரங்களில் கள்ளக்குறிச்சிக்கு கட்டணம் நிர்ணயித்து, நகர் பகுதி வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.