| ADDED : டிச 01, 2025 05:26 AM
கள்ளக்குறிச்சி: வடக்கிழக்கு பருவ மழை பெய்து வரும் நிலையில், கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற கால்நடை துறை அறிவுறுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயத்தை சார்ந்திருக்கும் பசுமாடுகள், ஆடுகள், கோழிகள் என கால்நடைகள் வளர்ப்பிலும் கிராம மக்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின் போது கால்நடைகளும் பாதிப்படைகின்றன. இதனையொட்டி கால்நடைகள் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் மழையில் இருந்து தங்களது கால்நடைகளை பாதுகாத்திட மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை கால்நடை துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் பிரசாந்த் கூறியிருப்பதாவது; மழை, அதிக காற்று, இடி மற்றும் மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாத்திட திறந்தவெளி மரங்களுக்கடியில் கால்நடைகளை கட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும். நனைந்த அடர் தீவனத்தை கால்நடைகளுக்கு அளிக்கூடாது. மழை காலத்தில் பூஞ்சை தொற்றில்லாத அடர் தீவனத்தை அளிக்க வேண்டும். பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனங்களை சம விகிதத்தில் அளிக்க வேண்டும். தொடர்ந்து மழை வெள்ளத்தில் நனையாதவாறு கால்நடைகளை பாதுகாக்க வேண்டும். கால்நடை மற்றும் கோழிகளுக்கு வெதுவெதுப்பான தண்ணீரை அளிக்கலாம். அதிக நேரம் நீர் தேங்கிய இடங்களில் கட்டி வைப்பதை தவிர்ப்ப தன் மூலம் குளம்பு அழுகல் நோயினை தவிர்க்கலாம். கால்நடை கொட்டகைகள் மழை நீர் ஒழுகாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். கொட்டகை ஈரமாக வும், அசுத்தமா கவும் இருந் தால் மடி நோய் ஏற்படலாம் என்பதால், கிரிமிநாசினி மற்றும் மூலிகைகளை கால்நடை மருத்துவரின் அறிவுரை படி பயன்படுத்தலாம். கறவை மாடுகளின் பால் உற்பத்தியை பெருக்க தாதுப்பு கலவையை 30-50 கிராம் வரை அளிக்கலாம். கன்றுகள் மற்றும் ஆட்டுக்குட்டிகளை குளிர் தாக்கா வண்ணம் கொட்டகையை சுற்றிலும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான குடற்புழு நீக்கம் மற்றும் உண்ணி நீக்கம் செய்ய வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கான தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். மழையில் ஆடுகளை திறந்தவெளியில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வதை தவிர்க்க வேண்டும். ஆட்டு பண்ணையாளர்கள் ஆட்டுக் கொள்ளை நோய்க்கான தடுப்பு ஊசியை அருகில் உள்ள கால்நடை மருந்திகத்தினை அணுகி செலுத்த வேண்டும். உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு மழைகாலங்களில் கால்நடைகளை பாதுகாத்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.