உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / காலி செய்யப்பட்ட அரசு அலுவலக கட்டடங்கள்... வீணாகிறது; புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

காலி செய்யப்பட்ட அரசு அலுவலக கட்டடங்கள்... வீணாகிறது; புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் காலி செய்யப்பட்ட அரசு அலுவலகங்கள் இயங்கிய கட்டடங்கள் வீணாவதை தடுக்க பழமை மாறாமல் புனரமைக்கவோ அல்லது புதிதாக கட்டடங்களைக் கட்டவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் கடலுாருக்கு அடுத்தபடியாக திருக்கோவிலுார் நகரம் இருந்தது. இதன் காரணமாக நீதிமன்றம், சிறைச்சாலை, ஆர்.டி.ஓ., அலுவலகம், பங்களா, பயணியர் விடுதி இப்படி பல அரசு கட்டடங்கள் வரிசையாக 100 ஆண்டுகளைக் கடந்தும் பழமை மாறாமல் அடையாள சின்னமாக உள்ளது. நாடு சுதந்திரத்திற்கு பிறகு திருக்கோவிலுாரின் வளர்ச்சி கேள்விக்குறிதான். தமிழகம் எத்தனையோ மாற்றங்களை பெற்று வளர்ச்சியின் உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில், திருக்கோவிலுாரின் வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டால் ஒன்றிரண்டு நிகழ்வுகளை விரல்விட்டு சொல்லி விடலாம். திருக்கோவிலுாரில் இருந்து விழுப்புரத்திற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் பிரிந்து சென்றது. கண்டாச்சிபுரம், திருவெண்ணைநல்லுார் தாலுகாக்கள் பிரிந்தது. மாவட்ட பிரிப்பின் காரணமாக பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை என பல அலுவலகங்களும் பிரிந்து இன்று நகரமே சுருங்கி உள்ளது. நகருக்கு மத்தியில் இருக்கும் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் மழை பெய்தால் ஒழுகும் கான்கிரீட் கூரை கொட்டகையாக தான் இருக்கிறது. சந்தைப்பேட்டையில் இருக்கும் பயணியர் விடுதியும் 100 ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையில் மாவட்ட உயர் அதிகாரிகளும், நீதி அரசர்களும் தங்குவதற்கு லாயக்கற்ற ஆய்வு மாளிகையாகவே இருந்து வருகிறது. ஆர்.டி.ஓ., பங்களா கலையிழந்து புதர் மண்டியுள்ளது. பக்கத்தில் இருக்கும் பொதுப்பணித்துறை அலுவலக பங்களா இழுத்து மூடப்பட்டு விட்டது. பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை நிர்வாகம் சுருங்கி பல கோடி ரூபாய்க்கு எஸ்டிமேட் போட்டு பணிகளை மேற்கொள்ளும் இந்த இரண்டு அலுவலகங்களும் உட்காரகூட தகுதியற்ற நிலையில் ஆலங்கோலமாக உள்ளது. அரசு மருத்துவமனை அருகே உள்ள டாக்டர்கள் குவாட்ரஸ் பாழடைந்து வாழத் தகுதியற்ற இடமாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வேலு, முன்னாள் அமைச்சர் பொன்முடி இருவருக்குமான அதிகார போட்டியின் காரணமாக பொன்முடியின் தொகுதியாக இருக்கும் திருக்கோவிலுாரின் வளர்ச்சிக்கு அவர் சார்ந்த துறையின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லை என்பதுதான் நிதர்சனம். திருக்கோவிலுார் தரைப்பாலத்திற்கு மாற்றாக உயர்மட்ட பாலம் அமைக்கும் அ.தி.மு.க., வின் கடந்த கால முயற்சிக்கு இதுவரை முட்டுக்கட்டையாக இருந்து, பல கட்ட போராட்டங்களும், பொது மக்களின் அழுத்தத்தின் காரணமாக தற்போது தான் பாலம் கட்டுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. தேர்தலுக்குள் அதுவும் நிறைவேற்றப்படுமா என்பது கேள்விக்குறிதான். திருக்கோவிலுாருடன் ஒப்பிடும்போது எத்தனையோ ஊர்கள் எத்தனையோ மடங்கு வளர்ச்சியை எட்டி இருக்கும் நிலையில் இங்குமட்டும் பாழடைந்த அலுவலகங்களும், குடியிருப்புகளும் அதிகாரிகள், ஆட்சியாளர்களின் அவலங்களும் நகரின் வளர்ச்சி நிலையை காட்டும் சாட்சியாக நிற்கிறது. திருக்கோவிலுாரை, விழுப்புரத்துடன் சேர்த்து, பழமையான அரசு அலுவலக கட்டடங்களை பழைமை மாறாமல் புதுப்பிக்கவோ அல்லது புதிய அலுவலகங்களை கட்டி, நகரின் பெருமையை மீட்டெடுக்க அரசு முன்வர வேண்டும் என்பதே திருக்கோவிலுார் நகர மக் களின் கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை