ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை, வல்லக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில், சாலையின் நடுவே மீடியனில் வரிசையாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த, வல்லக்கோட்டையில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் பெற்ற இந்த தலம், 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.இக்கோவிலில், 7 அடி உயரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவிலுக்கு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் அரசு பேருந்து வாயிலாக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், வல்லக்கோட்டை பேருந்து நிறுத்தத்தின் இருப்புறங்களிலும் உள்ள மீடியனின் நடுவே, அதிகளவில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.இதனால், பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணியர், விளம்பர பலகைகள் மேலே விழும் அச்சத்தில் காத்திருக்க வேண்டி உள்ளது.நெடுஞ்சாலையில், போக்குவரத்திற்கு இடையூராக வரிசையாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள், காற்று வேகமாக வீசும் போது, சரிந்து சாலையில் விழும் அபாயம் உள்ளது. இதனால், நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.அதேபோல, கடைகள், கொடி கம்பம், மின்கம்பம், கல்வெட்டு போன்றவை மீடியனில் வைக்கப்பட்டுள்ளதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே, நெடுஞ்சாலையில் போக்குவரத்து மற்றும் பயணியர்களுக்கு இடையூராக, மீடியனில் உள்ள பேனர் உள்ளிட்ட அனைத்தையும் அப்புறப்படுத்த, நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.