காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, கண்ணகிபுரத்தில் சாந்த விநாயகர், அரச மரத்து சுயம்பு விநாயகர், சுப்பிரமணியர் சமேத வள்ளி, தெய்வானை, படவேட்டம்மன், பச்சையம்மன், துர்க்கையம்மன் மற்றும் நவக்கிரஹ கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடித்திருவிழா, நாளை, காலை 6:00 மணிக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.அதை தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், மாலை 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.வரும் 18ம் தேதி, காலை 9:00 மணிக்கு படவேட்டம்மன், பச்சையம்மன் வீதியுலாவும், மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், தொடர்ந்து கும்பம் படையிட்டு அம்மன் வர்ணிப்பும், ஊரணி பொங்கல் வைத்தலும், இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது.காஞ்சிபுரம் அடுத்த, வெள்ளைகேட் பகுதியில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆடித் திருவிழா ஆக.,11ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.நேற்று முன்தினம், காலை 8:00 மணிக்கு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மதியம் 1:00 மணி அளவில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10:00 மணி அளவில், முத்துமாரியம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.