காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி துறையில், 17.21 கோடி ரூபாய் மின் கட்டணம் நிலுவையில் உள்ளது. பயன்பாடில்லாத இணைப்புகளை துண்டிக்க, மின்வாரியத்தினர் முடிவு செய்துள்ளனர். இனி, 'டிஎன் பாஸ்' என்ற இணையதள முகவரி மூலமாக மின் கட்டணம் செலுத்த, துறை ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் வட்டாரங்களில், 274 ஊராட்சிகளில், 1,354 குக்கிராமங்கள் உள்ளன. ஊராட்சிகளில், தெரு விளக்கு மற்றும் குடிநீர் இணைப்புகளுக்கு மின் வாரியம் மின் இணைப்பு வழங்கியுள்ளன.பெரும்பாலான ஊராட்சி கட்டடங்கள், தெரு விளக்குகள், குடிநீர் இணைப்புகளுக்கு ஊராட்சி நிர்வாகம் மின் அளவீடு செய்த, 15 நாட்களில் மின் கட்டணங்களை அந்தந்த ஊராட்சி நிர்வாகம் செலுத்துவதில்லை. மாறாக, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மற்றும் ஆண்டிற்கு ஒரு முறை என, ஊரக வளர்ச்சி துறையினர் பணம் அனுப்பும் போது, வட்டி கட்டணத்துடன் ஊராட்சி நிர்வாகங்களின் மின் கட்டணத்தை செலுத்துகின்றனர். அறிவுரை
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த ஜனவரி மாதம், 18 கோடி ரூபாய் மின் கட்டண பாக்கி இருந்தது. இதில், 5 கோடி ரூபாய் கட்டி முடித்தனர். மீதம், 13 கோடி ரூபாய் நிலுவை இருந்தன.ஆறு மாதங்களின் மின்சாரம் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக மின் கட்டணம் பாக்கி 13 கோடி ரூபாயில் இருந்து, 4.21 கோடி ரூபாய் அதிகரித்து, 17.21 கோடி ரூபாயாக நிலுவை தொகை உள்ளது.இந்த நிலுவை மின் கட்டணத்தை, செலுத்த வேண்டும் என, ஊராட்சி நிர்வாகங்களுக்கு மின் வாரியம் அறிவுரை வழங்கியுள்ளது. இருப்பினும், வசூலாகவில்லை. ஜூலை மாதம் முதல், மின் கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த உயர்வு படி, அடுத்த மாத மின் மீட்டர் அளவு கணக்கெடுப்பின் படி மின் கட்டணம் பாக்கி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.உதாரணமாக, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சி துறைக்கு சொந்தமான, மாவட்ட வள பயிற்சி மைய கட்டடம் பயன்பாடு இன்றி உள்ளது. இந்த கட்டடத்திற்கு, 2 லட்சம் ரூபாய் வரையில், மின் கட்டணம் பாக்கி வைக்கப்பட்டுள்ளது.பயன்பாட்டில் இல்லாத கட்டடத்திற்கு, 2 லட்ச ரூபாய் மின் கட்டணம் பாக்கி இருப்பது போல, பல ஊராட்சிகளில் பயன்படுத்தப்படாத குடிநீர் மின் இணைப்பு மற்றும் பூட்டி கிடக்கும் கட்டடங்களுக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது என, துறை அலுவலர்கள் இடையே புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.இதை சரி செய்தாலே, மின் கட்டணம் பாக்கி குறையும் வாய்ப்பு உள்ளது என, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஊராட்சிகளில் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகளை துண்டிக்க மின் வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. நடவடிக்கை
ஊராட்சிகளில், மின் கட்டணத்திற்கு வழங்கப்படும் வங்கி கணக்கில், எவ்வளவு நிதி இருப்பு உள்ளது. அதன் விபரம் மற்றும் காசோலை புத்தகம் ஒப்படைப்பு விபரத்தை கேட்டுள்ளோம்.இதை, ஊராட்சி நிர்வாகம் சரண்டர் செய்த பின், 'டிஎன் பாஸ்' என்ற இணையதள முகவரி மூலமாக, எவ்வளவு பணம் வருகிறது. எவ்வளவு செலுத்த வேண்டும் என, ஆலோசனை செய்து, அதன் மூலமாக நிலுவையின்றி மின் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மின் கட்டண பாக்கி விபரம்
ஒன்றியம் மின் கட்டணம் நிலுவை - கோடி ரூபாயில்காஞ்சிபுரம் 6.25வாலாஜாபாத் 2.65ஸ்ரீபெரும்புதுார் 3.75குன்றத்துார் 2.80உத்திரமேரூர் 1.76மொத்தம் 17.21
'டிஎன் பாஸ்' இணையதளம்
'டிஎன் பாஸ்' என, அழைக்கப்படும் தமிழ்நாடு பஞ்சாயத்து எளிமைபடுத்தப்பட்ட வங்கி கணக்கு முறை ஊராட்சிகளில் கையாளப்படுகிறது.இந்த இணையதள முகவரி முலமாக, ஊராட்சி செயலர் ரகசிய குறியீடு உள்ளீடு செய்ய வேண்டும். இரண்டாவதாக, துணை தலைவர் ரகசிய குறியீடு பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியாக, ஊராட்சி தலைவர் ரகசிய குறியீடு உள்ளீடு செய்த பின், எந்த பயனாளிக்கு பணம் செல்ல வேண்டுமோ அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் சென்றடையும்.முன்பு, ஊராட்சி தலைவர், துணை தலைவர் வங்கி காசோலை தொகை நிரப்பி, இருவரும் கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டும். இனி மேல், 'டிஎன் பாஸ்' மின்வாரிய வங்கி கணக்கு இணையதள பதிவேற்றம் செய்துவிட்டால், ஊராட்சி செயலர், துணை தலைவர், தலைவர் ரகசிய குறியீடுகள் உள்ளீடு செய்த பின் தொகை மின் வாரியத்திற்கு எளிமையாக சென்றுவிடும்.