| ADDED : ஆக 05, 2024 01:28 AM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை துணை இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது.இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகளை ஏற்றி செல்லும் பணியை, சுகாதார ஊழியர்கள் செய்து வருகின்றனர்.இதுதவிர, துணை சுகாதார நிலையத்தில் இருந்து, ஆய்வுக்கு செல்லும் அலுவலர்களின் ஜீப் மற்றும் மருந்துகளை ஏற்றி செல்லும் லோடு வாகனங்கள் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்படுகின்றன.ஒன்றரை ஆண்டுக்கு மேலாக சேதம் ஏற்பட்டு இருக்கும் ஜீப் மற்றும் எய்சர் லாரி ஆகிய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால், வாகனங்களின் இடையே புதர் செடிகள் மண்டிக் கிடக்கிறன. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் சுகாதரா நிலை வளாகத்தில் இருக்கிறது என, சுகாதார துறை ஊழியர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.எனவே, சேதம் ஏற்பட்டு பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதுகுறித்து, சுகாதாரத் துறை ஊழியர்கள் கூறியதாவது:வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி ஆகிய துறை அதிகாரிகளுக்கு செல்லும் வாகனங்கள் சேதம் ஏற்பட்டால், உடனடியாக கழிவுநீக்கம் செய்து, புதிய வாகனங்களை வாங்குவதற்கு துறைரீதியாக பரிந்துரை செய்கின்றனர்.இந்த, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறைக்கு மட்டும், 12 ஆண்டுகளாக எந்த ஒரு வாகனமும் வாங்குவதற்கு பரிந்துரை செய்யவில்லை.இதனால், அதிகாரிகள் ஆய்வுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதை தவிர்க்க, துணை சுகாதார நலப்பணிகள் அலுவலகத்தில், நிறுத்தப்பட்ட சேத வாகனங்கள் கழிவு நீக்கம் செய்ய, மாநில சுகாதார போக்குவரத்து பணிமனையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.