செங்கல்பட்டு : ஸ்ரீபெரும்புதுார் லோக்பசா தொகுதியில், 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையம், சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில் அமைக்கப்பட்டு உள்ளது.இம்மையத்தில், பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு தரைதளத்திலும், மதுரவாயல், அம்பத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு முதல் தளத்திலும், ஆலந்துார் சட்டசபை தொகுதிக்கு இரண்டாம் தளத்திலும், ஓட்டு எண்ணும் மையங்கள் உள்ளன.ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும், 12 ஸ்டராங்க் ரூம்களில், 4,874 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.அதை தொடர்ந்து நேற்று, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஓட்டு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ் தலைமையில், நடந்தது.இதில், தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா பங்கேற்று பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, கூடுதல் கலெக்டர் அனாமிகா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன், தாசில்தார் சிவசங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.