| ADDED : மார் 15, 2024 12:16 AM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம், 1971ல், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்டது. குறைந்த கட்டணம் என்பதால், பொதுமக்கள் இந்த மண்டபத்தை அதிகளவு பயன்படுத்தி வந்தனர்.முறையான பராமரிப்பு இல்லாததால், பொலிவிழந்தும், சில பகுதி சிதிலமடைந்த நிலையிலும் இருந்த இம்மண்டபத்தை நவீன வசதிகள் கொண்ட திருமண மண்டபமாக மாற்றியமைக்க காஞ்சிபுரம் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், காஞ்சிபுரம் மாநகராட்சி, மத்திய மானிய நிதி திட்டம் 2023 - -24ன் கீழ், 8.7 கோடி ரூபாய் செலவில் புதிதாக நவீன திருமண மண்டபம் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த மாதம் 6ல் நடந்தது. இதில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டினார்.இதைத்தொடர்ந்து புதிய மண்டபம் கட்டுமானப் பணிக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதில், முதற்கட்டமாக பழைய கட்டடம் இடிக்கும் பணி துவக்கப்பட்டு உள்ளது. கட்டடக் கழிவுகள் முற்றிலும் அகற்றப்பட்டப்பின் கட்டுமானப் பணி துவக்கப்பட உள்ளதாக மாநகராட்சி பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.