செங்கல்பட்டு : காஞ்சிபுரம் மாவட்டம், முசரவாக்கம் விநாயகபுரத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மனைவி பார்வதி, 60. இவர், 2018ம் ஆண்டு, டிச., 7ம் தேதி, திருப்புட்குழி பகுதியில், மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.அப்போது, முசரவாக்கம் ரேணுகாம்பாள் கோவில் தெருவைச் சேர்ந்த சீராளன், 39, என்பவர், மூதாட்டி கழுத்தில் இருந்த ஐந்து சவரன் நகையை பறித்து, கொலை செய்தார்.இது குறித்து, பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சீராளனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில்,நீதிபதி எழிலரசி முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார்.இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சீராளனுக்கு ஆயுள் தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி எழிலரசி நேற்று தீர்ப்பளித்தார்.மேலும், அபராதத் தொகையில் இருந்து, பாதிக்கப்பட்ட பார்வதி குடும்பத்தினருக்கு, 15,000 ரூபாய் வழங்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.அதன்பின், அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குப்பின், புழல் சிறையில் சீராளனை போலீசார் ஒப்படைத்தனர்.