உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  நெடுஞ்சாலையை மறித்து நிற்கும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

 நெடுஞ்சாலையை மறித்து நிற்கும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார்: செரப்பனஞ்சேரியில் நெடுஞ்சாலையின் இருபுறமும் மறித்து நிற்கும் மாடுகளால், வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். வண்டலுார்- -- வாலாஜாபாத் மாநில நெடுஞ்சாலை வழியே வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தவிர, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அரசு, தனியார் பேருந்து, கார், பைக் உள்ளிட்ட ஏராளமான வாகனங்களில் சென்று வருகின்றனர். போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலையில், செரப்பனஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே, சாலையின் இருபக்கங்களிலும் மாடுகள் வழிமறித்து நிற்கின்றன. செரப்பனஞ்சேரியில் மாடுகளை வளர்த்து வரும் விவசாயிகள், தங்களின் மாடுகளை கொட்டகையில் வைத்து பராமரிப்பது இல்லை. மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள், இரவு நேரங்களில் நெடுஞ்சாலை நடுவே படுத்து ஓய்வெடுக்கின்றன. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். சாலையின் நடுவே படுத்துள்ள மாடுகள், திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டிகள் கட்டுப்பாட்டை இழந்து மாட்டின் மீது மோதி, விழுந்து காய மடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே, சாலையில் திரியும் மாடுகளை பிடித்து மாட்டு தொழுவத்தில் அடைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்