| ADDED : மார் 05, 2024 11:30 PM
குன்றத்துார்:காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துாரில், பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. தமிழகத்திலேயே, வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரே கோவில் இது மட்டுமே.இங்கு, வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி மற்றும் கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கோவிலில் பொது தரிசனம், 50, 100 ரூபாய் கட்டண தரிசன வசதியும் உள்ளது.இந்நிலையில் நேற்று, கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது, 'ஆன்லைன்' வழியாக 'பிரின்ட்' எடுக்கப்படும் 50 ரூபாய் டிக்கெட்டில், பேனாவால் அடித்து 100 ரூபாய் டிக்கெட் என மாற்றி, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால், கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பக்தர்கள் கூறியதாவது:குன்றத்துார் முருகன் கோவிலில், கட்டண கொள்ளை நடக்கிறது. 50 ரூபாய் டிக்கெட்டை 100 ரூபாய்கு விற்று முறைகேடில் ஈடுபடுகின்றனர். இந்த பணம் அரசுக்கு செல்லாமல், தனி நபர் கணக்கிற்கே செல்கிறது.தவிர, பணம் செலவழித்து, தரிசன டிக்கெட் எடுத்து நாங்கள் வரிசையில் காத்திருக்கும் நிலையில், கோவில் நிர்வாகிகளுக்கு தெரிந்தோரை விரைவு தரிசனத்திற்கு அனுப்புகின்றனர்.குன்றத்துார் முருகன் கோவிலில், பக்தர்கள் எளிதாக சுவாமி தரிசனம்செய்ய, அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா கூறியதாவது:மென்பொருள் பழுது காரணமாக 100 ரூபாய் டிக்கெட் எடுக்க முடியவில்லை. அதனால், 50 ரூபாய் டிக்கெட் இரண்டாக எடுத்து வழங்கினோம். பக்தர்கள் எதிர்ப்பு காரணமாக, 100 ரூபாய் டிக்கெட் வழங்குவதை, தற்காலிகமாக நிறுத்தினோம். நேற்று முன்தினம் - நேற்று மட்டும் தான் இந்த சிக்கல் ஏற்பட்டது. மற்றபடி எந்த முறைகேடும் நடக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.