சன்னிதி தெரு கால்வாயில் அடைப்பு மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் சன்னிதி தெருவில், மழைநீர் வடிகால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் சன்னிதி தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், குப்பை கழிவுகளாலும், மண் திட்டுகளாலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது. எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் காமாட்சியம்மன் சன்னிதி தெருவில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் உள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.