| ADDED : நவ 24, 2025 02:21 AM
உத்திரமேரூர்: வெங்கச்சேரியில், கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும், மேல்நிலை குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, வெங்கச்சேரி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு சிறுமின்விசை குழாய், மேல்நிலை குடிநீர் தொட்டியின் மூலமாக, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியினருக்கு, ஏற்கனவே கட்டப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் வினியோகம் செய்யப்பட்டும் குடிநீர் போதவில்லை. எனவே, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, வெங்கச்சேரியில் புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட ஊராட்சி நிர்வாகம் தீர்மானித்தது. அதன்படி, கடந்த 2023ம் ஆண்டில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், 27.25 லட்சம் ரூபாய் மதிப்பில் மதிப்பில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணி துவக்கப்பட்டது. தற்போது, பணிகள் முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் மேல்நிலை குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால், குடியிருப்புகளுக்கு போதியளவு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி இதுவரை காட்சி பொருளாகவே உள்ளது. இதே நிலை நீடித்தால் தொட்டி சேதமடைய வாய்ப்பு உள்ளது. இது குறித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது : வெங்கச்சேரியில் புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தெருக்களில் புதைக்கப்பட்டுள்ள குழாயோடு இன்னும், குடிநீர் இணைப்பு ஏற்படுத்தப்படவில்லை. இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, மேல்நிலை குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.