ரயில் படிக்கட்டில் பயணித்தவர் பலி
திண்டுக்கல்:கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே மயிலாடிபுதுாரைச் சேர்ந்த அர்ஜுனன் மகன் பவனேஷ், 17. புதுச்சேரி சிவன் கோவிலில் நடந்த சிற்ப வேலைக்கு சென்றார். வேலையை முடித்து, நேற்று முன்தினம் இரவு விழுப்புரத்திலிருந்து, உடன் பணியாற்றிய சிலருடன் சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் பயணித்தார்.கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டில் அமர்ந்திருந்தார். நேற்று அதிகாலை திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே மொட்டணம்பட்டி பகுதியில் ரயில் சென்றபோது, மொபைல் போன் பார்த்த படி இருந்த பவனேஷ், தவறி விழுந்து இறந்தார். திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.