| ADDED : ஆக 23, 2024 02:09 AM
கரூர் ஆக. 23--ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களின் தற்செயல் விடுப்பு போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.ஊரக வளர்ச்சித்துறையில், காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். பஞ்., செயலர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடு கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும், வளர்ச்சித்துறை ஊழியர் மீது திணிக்கப்படும், பிற துறை பணிகளை முற்றாக கைவிட வேண்டும் தமிழக முதல்வர் அளித்துள்ள வாக்குறுதிகளில் ஒன்றான, கடந்த கால வேலை நிறுத்த நாட்களை வரன்முறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், கரூர் மாவட்டத்தில் இரண்டு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நேற்று தொடங்கியது.இதில், 351க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், எட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.