| ADDED : ஜூன் 27, 2024 03:37 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, தொண்டாமாங்கிணம் பஞ்., சுக்காம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.கடவூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு தாசில்தார் இளம்பரிதி தலைமை வகித்தார். தனி தாசில்தார் பிரபாகரன், தலைமையிடத்து துணை தாசில்தார் சத்தியமூர்த்தி, தோகைமலை எஸ்.ஐ., பாலசுப்ரமணி, கடவூர் சரக ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் மாணிக்கசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், கடவூர் வட்டம் தொண்டமாங்கிணம் பஞ்., சுக்காம்பட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை, இரு தரப்பினருக்குள் ஒருவரை தலைமை ஏற்று நடத்துவதில் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் இணைந்து ஒற்றுமையாக விழா கொண்டாட ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, அறநிலையத்துறை மூலம் பொறுப்பு தலைவர் தேர்ந்தெடுத்த பின்னர் விழா கொண்டாடுவதாக இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.இதில் தனிப்பட்ட யாரும் கோவிலை உரிமை கொண்டாட அனுமதி கிடையாது என்றும் தீர்மானிக்கப்பட்டது. தற்போதைக்கு கோவில் பூசாரிகள் வடிவேல், ஆறுமுகம் ஆகிய இருவரும் கோவில் நகைகள் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதும், பூஜை செய்வதும், கண்காணிப்பதும் முழு பொறுப்புடையவர் ஆவர். கோவிலில் சட்டம் ஒழுங்கு பிரச்னையோ, அசம்பாவிதமோ ஏற்படும் பட்சத்தில், இவர்களே பொறுப்புடையவர்கள் ஆவர் என இரு தரப்பினரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.மைலம்பட்டி ஆர்.ஐ., அருள்ராஜ், தொண்டமாங்கிணம் வி.ஏ.ஓ., தமிழரசி உள்பட சுக்காம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா சம்மந்தமாக நாகராஜன் மற்றும் கருணாகரன் தரப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.