சாலையோரம் வாகனங்கள் நிறுத்தம் போக்குவரத்து நெரிசலால் அவதி
கரூர், நவ. 20-கரூர், தான்தோன்றிமலை சாலையோரம் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கரூரில் இருந்து, தான்தோன்றிமலை சுங்ககேட் சாலை வழியாக அரசு அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகம், திருச்சி பைபாஸ் சாலை, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் பிற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இதில், மில்கேட் பகுதியில் இருந்து பழைய எஸ்.பி., அலுவலகம் வரை, சாலையின் இருபுறமும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இங்கு, சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. சுங்ககேட்டில் இருந்து வெங்ககல்பட்டி வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில், வடிகால் கட்டப்பட்டுள்ளது. மேலும், பாதசாரிகள் செல்ல வசதியாக சாலையோரம் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில், சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:வர்த்தக நிறுவனங்கள், வங்கிகளுக்கு தினமும் வாடிக்கையாளர்கள் செல்கின்றனர். இவர்கள், சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு, நீண்ட நேரம் கழித்துதான் எடுத்து செல்கின்றனர். சாலையின் இரு பகுதிகளில், எல்லையை குறிக்கும் வகையில் வெள்ளை கோடு வரையப்பட்டுள்ளது. அந்த கோட்டையும் ஆக்கிரமித்து, வாகனங்கள் வரிசை கட்டி நிறுத்தப்படுகிறது. மேலும், பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக அமைக்கப்பட்டுள்ள பிளாட்பாரத்தில், சரக்கு வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, சாலையோரம் சரக்கு வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.