கரூர்: பொங்கல் பண்டிகையொட்டி, மண்பானை விற்பனை, கரூரில் ஜோராக நடந்து வருகிறது.தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் இன்று போகியுடன் தொடங்குகிறது. அப்போது, பாரம்பரியமாக பொங்கல் வைக்க, தமிழர்கள் மண் பானைகளை பயன்படுத்தி வருகின்றனர். நேற்று பொது மக்கள், விவசாயிகளை தவிர பள்ளி மற்றும் கல்லுாரிகளிலும், மாணவ, மாணவியர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.நாளை பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், கரூர் மாவட்டத்தில் பசுபதி பாளையம் ஐந்து சாலை, பஞ்சமா தேவி, புலியூர், வெள்ளியணை உள்ளிட்ட பல இடங்களில் மண் பானை தயாரிப்பு கடந்த, ஒரு மாதம் முன் துவங்கியது. கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட், ஜவஹர் பஜார், காந்தி கிராமம், தான்தோன்றிமலை, பசுபதிபாளையம், வெங்கமேடு உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில் விற்பனை களை கட்டியுள்ளது.பானைகளின் அளவை பொறுத்து, 100 ரூபாய் முதல், 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் மண் அடுப்பு, 50 ரூபாய் முதல், 80 ரூபாய் வரை விற்பனைக்கு தயாராக உள்ளது. அதை, பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.