கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 270 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.ஹரியானா மாநிலம், ஹிசார் பகுதியில், ராணுவத்தில் அவில்தாராக பணியாற்றிய பர்கூர் அடுத்த பாலேப்பள்ளியை சேர்ந்த ராஜேந்திரன், சாலை விபத்தில் இறந்ததையடுத்து, பஞ்சாப் நேஷனல் வங்கியில், சம்பள கணக்கு வைத்திருந்த அவருக்கு, ரக்சா பிளஸ் திட்டத்தில், 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, அவர் மனைவி ஜோதியிடம், கலெக்டர் சரயு வழங்கினார். மாநில அளவில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் வென்ற, பெரியபனமுட்லு பள்ளி மாணவி மதுமிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 28,000 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் அலுவலக பயன்பாட்டிற்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள, 7 வாகனங்களுக்கான சாவிகளை, வாகன டிரைவர்களிடம் வழங்கினார்.மத்துார் பி.டி.ஓ., அலுவலக வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வரும், முன்னாள் ராணுவ வீரர் சண்முகம் கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரண நிதியாக தன் ஒரு மாத ஓய்வூதிய தொகையான, 30,161 ரூபாய்க்கான காசோலையை கலெக்டரிடம் வழங்கினார்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.