| ADDED : ஆக 03, 2024 09:28 PM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேர்ப்பேட்டை, தெப்பக்குளம் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 27; சென்ட்ரிங் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., உறுப்பினர் ஆதி, 29. ஓசூர் மாநகர தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் பாலாஜி, 36.நேற்று முன்தினம் மாலை, ராயக்கோட்டை சாலையில் ஒரு கடையில், சுரேஷ் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த ஆதி, பாலாஜி ஆகியோர் தள்ளி நின்று புகை பிடிக்குமாறு கூறியதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுரேஷ், இருவர் மீதும் கற்களை வீசி தாக்கியுள்ளார்.பின், அங்கிருந்து சென்ற சுரேஷ், ஆதியை மொபைல்போனில் மிரட்டி, 'ஒத்தைக்கு ஒத்தை வா; மோதி பார்க்கலாம்' என, எழில் நகரிலுள்ள காலி இடத்துக்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு சென்ற ஆதி, பாலாஜியுடன் சேர்ந்து, சுரேஷை கட்டையால் தாக்கினார்.படுகாயமடைந்த சுரேஷ், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுரேஷின் தந்தை வெங்கடேஷ் புகார்படி, ஆதி, பாலாஜியை போலீசார் கைது செய்தனர்.