உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / யுகாதி பண்டிகை: பக்தர்கள் மீது நடந்து சென்று ஆசி வழங்கிய பூசாரி

யுகாதி பண்டிகை: பக்தர்கள் மீது நடந்து சென்று ஆசி வழங்கிய பூசாரி

கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த சிந்தகம்பள்ளி கிராமத்தில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு நேற்று அதிகாலை முத்துமாரியம்மன் சுவாமி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மல்லிகை பூக்கள் மற்றும் வெள்ளியால் ஆன சிறிய குடைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கரகத்தை கோவில் பூசாரி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சென்றார்.அப்போது, கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பும் அந்த கரகத்திற்கு சிறப்பு பூஜை செய்தது, வேண்டுதல் உள்ளவர்கள் ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்கள் வேண்டிக் கொண்டு, அண்ணா நகரிலுள்ள காளிக்கோவில் அருகில் இருந்து முத்துமாரியம்மன் கோவில் வரை சாலையில் ஈரத்துணியுடன் குப்புற படுத்துக் கொண்டனர். அவர்கள் மீது கரகம் எடுத்து வந்த பூசாரி நடந்து சென்று ஆசி வழங்கினார். பின்னர் கோவில் எதிரில் அமைத்திருந்த தீ குண்டத்தில் கரகத்துடன் பூசாரி இறங்கியவுடன், தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்தனர். அடுத்து பேய் விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இளைஞர்கள் ஒருவருக்கொருவர் சாயப்பொடிகளை பூசியும், முட்டைகளை தலைமீது உடைத்தும் யுகாதியை கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !