ஓசூர்: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லையில் பணியாற்றும் உயர்மட்ட போலீசார் ஆலோசனை கூட்டம், ஓசூரில் நேற்று நடந்தது.சேலம் டி.ஐ.ஜி., உமா தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி எஸ்.பி., தங்கதுரை, கர்நாடகா மாநில எல்லை கோலார் மாவட்ட எஸ்.பி., நாராயணா, கே.ஜி.எப்., எஸ்.பி., சாந்தராஜ், பெங்களூரு ரூரல் எஸ்.பி., மல்லிகார்ஜூனா பால்தண்டி, ஆந்திர மாநிலம் குப்பம் டி.எஸ்.பி., ஸ்ரீநாத் பங்கேற்றனர்.வரும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மாநில எல்லைகளில் புதிய சோதனைச்சாவடி அமைக்க வேண்டும். மது, பரிசு பொருள், பணம் செல்வதை தடுத்து, குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையே போலீசார் எளிதாக தகவல்களை பரிமாறி, தேர்தலை எந்தவித பிரச்னையுமின்றி சுமுகமாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட டி.எஸ்.பி.,க்கள் பாபு பிரசாந்த், முரளி, மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், நாகராஜ், சரவணன், சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.