கிருஷ்ணகிரி: போக்குவரத்து கழகங்களை சீர்குலைக்க முயற்சி நடப்பதாகவும், கடந்த, 2017ல், 23,000 பஸ்கள் இயங்கி வந்த நிலையில், 2018ல், 19,500ஆக குறைக்கப்பட்டது. 8 ஆண்டுகளாக பணி ஓய்வுபெற்ற, இறந்த தொழிலாளர்களுக்கு பதிலாக, புதிய தொழிலாளர்கள் நியமிக்காததால், 20,000 காலிப்பணியிடங்கள் உள்ளன. கடந்த, 5 ஆண்டுகளில், 4,000 பஸ்கள் குறைக்கப்பட்டுள்ளன. எனவே, நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டிய, 8,000 பேருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் நேற்று, அரசு போக்குவரத்து கழக, அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஒருங்கிணைப்பாளர் கிருபா சங்கர் தலைமையில், நாமம் வரைந்த அட்டையுடன், பஸ் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மாநில குழு உறுப்பினர் குணசேகரன் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் உடனிருந்தனர்.