உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இறங்குவதற்குள் புறப்பட்ட ரயிலால் தவறி விழுந்த தந்தை, மகன் படுகாயம்

இறங்குவதற்குள் புறப்பட்ட ரயிலால் தவறி விழுந்த தந்தை, மகன் படுகாயம்

ஓசூர் : ஓசூரில், இறங்குவதற்குள் ரயில் புறப்பட்டதால், பிளாட்பாரத்தில் தவறி விழுந்த தந்தை, மகன் படுகாயம் அடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார், 42; கெலமங்கலம் ஒன்றியத்தில், ஆசிரியர் பயிற்றுனராக பணியாற்றுகிறார். இவரது மனைவி பவித்ரா, 31; இவர்களுக்கு, 2 மகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை சசிக்குமார் தன் குடும்பத்துடன், காரைக்கால் - பெங்களூரு பயணிகள் ரயிலில், தர்மபுரியில் ஏறி, ஓசூருக்கு இரவு, 8:50 மணிக்கு வந்தார். ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. சசிக்குமார் தன், 3 வயது மகன் தீரனுடன் ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது ரயில் புறப்பட்டது. இதனால், 2வது பிளாட்பாரத்தில் தவறி விழுந்த சசிக்குமாருக்கு இடது காலிலும், மகன் தீரனுக்கு தலையிலும் காயம் ஏற்பட்டது. பயணிகள் சத்தம் போட்டதால் ரயில் நிறுத்தப்பட்டது. அவர்களை மீட்ட சக பயணிகள், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாலை, 5:50 மணிக்கு ஓசூர் வர வேண்டிய ரயில், 3 மணி நேரம் தாமதமாக இரவு, 8:50 மணிக்கு வந்ததால், ஒரு நிமிடம் கூட நிற்காமல் வேகமாக புறப்பட்டது. அதனால் தான், இறங்கும் போது மகனுடன் கீழே விழுந்து காயமடைந்ததாக சசிக்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்