| ADDED : ஜூன் 07, 2024 12:23 AM
கிருஷ்ணகிரி : ஓசூரை சேர்ந்த தனியார் பெண் ஊழியரிடம், பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் எனக்கூறி, 5.70 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ்தி பகுதியை சேர்ந்தவர் சந்திரா, 46, தனியார் நிறுவன ஊழியர். இவரது வாட்ஸ் ஆப்பிற்கு கடந்த, ஏப்., 30ல் ஒரு மெசேஜ் வந்தது. அதில், ஒரு குறிப்பிட்ட நிறுவன பங்குசந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என இருந்தது. மேலும் அதற்கான மொபைல் ஆப் லிங்க் ஒன்றையும் அனுப்பி இருந்தனர். அதை நம்பி சிறிதளவு முதலீடு செய்த சந்திராவின் வங்கி கணக்கிற்கு லாபத்துடன் முதலீட்டு தொகை வந்தது.இதையடுத்து தன்னிடம் இருந்த, 5.70 லட்ச ரூபாயை அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பினார். அதன்பின் அவரது தொகை, லாபத்துடன் இணையதள பக்கத்தில் காண்பித்தபோதும் அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. அவரை தொடர்பு கொண்ட வாட்ஸ்ஆப் எண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சந்திரா, இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைமில் அளித்த புகார்படி போலீசார் விசாரிக்கின்றனர்.