| ADDED : ஜன 07, 2024 10:49 AM
கிருஷ்ணகிரி: பெண் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, அஞ்சல் வங்கிகளில் கணக்கு துவங்கி, அதை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும், பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தில், அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த, பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவியருக்கு ஆண்டுக்கு, 4,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற மாணவியர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அல்லது அஞ்சலகங்களில் வங்கிக்கணக்கு துவங்கி, அதை தம் ஆதார் எண், உரிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.