| ADDED : மார் 14, 2024 06:48 AM
ஓசூர் : ஓசூர் அருகே, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள கெலவரப்பள்ளி அணையின் ஷட்டர்கள் மிகவும் மோசமாக இருந்ததால், 28 ஆண்டுக்கு பின் கடந்தாண்டு ஜூன், 24 ல், 26 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக மாற்றும் பணி துவங்கியது. அணையின் ஷட்டர்கள் மாற்றும் பணி, அவற்றை திறப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள டெக் பாலம், சீரமைப்பு பணி மற்றும் டெக் பாலத்திற்கு அடியில் மற்றொரு புதுபாலம் அமைக்கும் பணி நடந்து வந்தன. அதனால் அணை நீர்மட்டம், 44.28 அடியில் இருந்து, 24 அடியாக குறைக்கப்பட்டது.அதன் காரணமாக, கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் போகத்திற்கும், நடப்பாண்டு பிப்., மாதம் 2ம் போகத்திற்கும் நீர் திறக்கப்படவில்லை. பணிகள் முடிவடைந்த நிலையில், கூடிய விரைவில் சோதனை முறையில் ஷட்டர்கள் எப்படி இயங்குகிறது என்பதை பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் அணையில் நீரை தேக்கி, வரும் ஜூலை மாதம் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது. ஷட்டர்கள் இயக்கத்தை உடனடியாக சோதனை செய்து, விரைவில் அணையில் தண்ணீர் சேமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.