உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மக்கள் கம்ப்யூட்டர் மையத்தில் 28,549 மனுக்களுக்கு தீர்வு

மக்கள் கம்ப்யூட்டர் மையத்தில் 28,549 மனுக்களுக்கு தீர்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மக்கள் கம்ப்யூட்டர் மையம் மூலம் 28,549 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம், மின் ஆளுமை மாவட்டமாக அரசால் அறிவிக்கப்பட்டு, வருவாய் துறை மூலம் வழங்கப்படும் ஜாதி, இருப்பிடம், வருமானம், முதல் பட்டதாரி மற்றும் விதவை சான்றுகள் ஆகியவை இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்கு, மாவட்டத்தில் உள்ள வருவாய்துறையை சேர்ந்த அலுவலகங்களுக்கு மின் ஆளுமை திட்டத்தின் கீழ், 5 தாசில்தார்களுக்கு 45 கம்யூட்டர்களும், 29 வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களுக்கு 29 கம்யூட்டர்களும், 29 பிர்கா தலைமையிடத்து கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு, 29 கம்யூட்டர்களும், கலெக்டர் அலுவலகத்திற்கு, 16 கம்யூட்டர்களும் வழங்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.பொதுமக்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதியாக, 3 பஞ்சாயத்துகளுக்கு ஒரு மக்கள் கம்ப்யூட்டர் மையம் வீதம், 221 மையங்கள் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. மேலும், சமூக நலத்துறையின் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மின் ஆளுமையின் மூலமாக நடக்கிறது. இது தவிர ஆதி-திராவிடர் நலம், பிற்படுத்தப்பட்டோர் நலன் போன்ற துறைகளில், கல்லூரி மாணவர்களுகான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமும் கம்ப்யூட்டர் மூலமாக நடந்து வருகிறது.மின் ஆளுமை திட்டத்தின் கீழ், மக்கள் கம்ப்யூட்டர் மையங்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பதை கலெக்டர் மகேஸ்வரன் கிருஷ்ணகிரி, ஓசூர், ராயக்கோட்டை சாலை ஆகிய இடங்களில் உள்ள மக்கள் கம்ப்யூட்டர் மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது கலெக்டர் கூறியதாவது:கிருஷ்ணகிரி தாலுகாவில், 10,724 மனுக்களும், ஊத்தங்கரை தாலுகாவில், 5,429 மனுக்களும், போச்சம்பள்ளி தாலுகாவில், 2,137 மனுக்களும், ஓசூர் தாலுகாவில், 7,458 மனுக்களும், தேன்கனிக்கோட்டை தாலுகாவில், 2,801 மனுக்களும் மொத்தம் சேர்த்து, 28,549 மனுக்கள் மக்கள் கம்ப்யூட்டர் மையம் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட அரசு துறை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில், 3,588 மனுக்கள் நிராகரிக்கப்பட்டும், 1,737 மனுக்கள் நிலுவையிலும் உள்ளது. நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு செய்து, தீர்காண வேண்டும். அவர்களுக்கு உரிய சான்றிதழ்கள் மற்றும் உதவிகள் ஒரு சில நாட்களில் சென்றடைய தாசில்தார்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் கூறினார்.ஆய்வின் போது, கிருஷ்ணகிரி தாசில்தார் மணி, தேசிய தகவல் அலுவலர் சாதிக் அலி, மின் ஆளுமை திட்ட ஒருங்கிணப்பாளர் மஞ்சுநாத், சஹாஜ் திட்ட ஒருங்கிணைப்பாளர் துவாரகப் பிரசாத், வருவாய் ஆய்வாளர் சாம்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை